Thursday, December 27, 2012

அனுபவம் பேசுகிறது


சுவையான பால்கோவா தயாரிப்பது எப்படி?
...
முதலில் அரை லிட்டர் பாலை உங்கள்
மனைவியையோ அல்லது வீட்டில்
யாரையாவதோ
வாங்கி வைத்துவிட்டு (பிரிஜில் அல்ல)
ஊருக்கோ அல்லது மருத்துவமனையில்
யாரையாவது பார்க்கவோ போக சொல்லிவிடுங்கள்...
(எனக்கு மனைவியே மருத்துவமனைக்கு
போக வேண்டிய சூழ்நிலை)

நான்கு அல்லது ஐந்து மணி நேரம் கழித்து
காய்ச்சாத அந்த பாலை காய்ச்சவும்..

பால் திரிந்து திரி திரியானால் நீங்கள்
புண்ணியம் செய்தவர்....
இல்லயென்றால்
இன்னும் 5  அல்லது 6 மணி நேரம் காத்திருக்கவும்...

பின்பு தண்ணீரை வடித்து விட்டு ஐந்து
தேக்கரண்டி சர்க்கரை கலந்து கிளரவும்

சுவையானா பால்கோவா ரெடி...........

Wednesday, December 19, 2012

திருமண வாழ்த்து

                           சிறுவயதில் பெண் பிள்ளைகள் தந்தையின் ஆதரவுடன் அதிகாரம் வீட்டில்  கொடிகட்டி பறக்கும். அண்ணனோ தம்பியோ வீட்டில் வம்பு சண்டை அல்லது சிறு உதவி செய்யாத போது சகோதரி மூலம் தந்தைக்கு தகவல் பறக்கும். எனவே சகோதரி என்றாலே உடன் பிறந்த சகோதரனுக்கு ஆகாது, 
            சிறுவயது போராட்டம் குரோதம் .கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பிக்கும். சகோதரி பெரியவளாக ஆனா பின்பு மரியாதை கலந்த பாசம் பிறக்கும் .சகோதரி மணவாழ்க்கை சிறக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்க ஆரம்பிப்பது பாசத்தின் எல்லை என்றே கூறலாம்.
            சகோதரி, சகோதரனின் தியாகத்தை எவ்வளவு நாள் உள்ளத்தில் வைத்திருப்பாள் என்பது கால சக்கரத்தின் சுழற்சியும் வாழ்க்கை சூழ்நிலையுமே நிர்ணயிக்கும்.
      இப்படித்தான் `வீட்டில்அதிகாரம்  கொடிகட்டி பறந்த` தன் அருமை 
தங்கையான எங்கள் அத்தைக்கு எங்கள் அப்பா வரைந்த வாழ்த்து மடல்  
     
மணமகன் : பழனிசாமி - மணமகள் : தனலட்சுமி   
                     13.11.1972 திங்கள் கிழமை. 
                     இடம் :வெள்ளகோவில்
                    
இது வண்ணத்தால் அச்சிட்ட வாழ்த்தல்ல... 
உள்ளத்தால் உருவாக்கப்பட்ட ஓவியம். 
கோலமிட்ட மணவரையில் கைகோர்த்து 
கொஞ்சிவரும் முழுநிலவில் குலவிட துடிக்கும் புதுமணப்பூக்களே... 
அளவோடு பெற்று வளமோடு வாழுங்கள்! 
என வாழ்த்தும் வாழ்த்தல்ல!! 

வாழ்க்கையின் வாசற்படியில் வலது காலை வைத்து நிற்கும் 
சிட்டுக்களுக்கு என் இதய...த்தில் பூட்டி வைத்திருந்த 
எண்ணங்களின் பொற்கலசம். . .

தங்குதடையின்றி கங்குகரை புரண்டு 
பொங்கிப்பெருகி வரும் காவிரியின் 
புதுப்புனல் போல துள்ளி வரும் என்
மனத்தின் எண்ண அலைகளை எழுத்தானியில் 
இழையவிட்டு இதயமென்னும் ஏட்டினிலே ஓடவிட்டு 
இருகரத்தால் ஏந்திவந்து வாய்திறந்து கொட்டுகின்றேன்.... 

கொங்குத்திருநாட்டின் தங்கமே... 
புலிக்குலத்துதித்த பொற்கொடியே.. 
மாவிலைப்பந்தலின்கீழ் மலர்விழி 
நிலம் நோக்கி நிற்கின்ற மாதரசியே.... 
எங்கள் குலப்பேரரசியே !!........ 

இன்று நீ வரப்போகும் வாழ்நாளின் 
இன்ப நினைவுகளில் சிறகடித்துப் பறந்து கொண்டிருக்கலாம் ...
ஆனால் நானோ கடந்த காலத்தில் பிறந்த பின்... 
வளர்ந்தபின்... ஓரளவு உலகத்தை அறிந்தபின்.. .........

அன்றுமுதல் இன்றுவரை மறைந்துபோன 
நாட்களில் மறக்க முடியாத சில 
பொன்னான நாட்களையும் புண்ணான நாட்களையும் 
சிந்தித்துப் பார்கின்றேன். ............

பள்ளிப் பருவத்திலே ஏட்டுக்கும் எழுத்தாணிக்கும் போட்டி,
தீபாவளித்திரு நாளிளே பட்டாசுக்குப் போட்டி, 
பொங்கள் புதுநாளிளே புத்தாடைக்குப் போட்டி, 
பங்கித்தரும் திண்பன்டம் சரிபாதியாயினும் 
அதிலே குறை நிறையென ஏளனச் சண்டை, 
பருவம் வந்தது அன்பிலும், பாசத்திலும், 
ஆயிரமாயிரம் சண்டை,,,

அவை அனைத்தும் இன்று என் கண்முன்னே நின்று...
என்னை செயலற்றவனாக் சிந்திக்கவைக்கின்றது ......ம்....... 

ஆணுக்கு ஆணாகும்... பெண்ணுக்குப் பெண்ணாகும் 
என் கண்ணுக்குக் கண்ணாகும்... 
என்று சொல்லிச் சொல்லி ஊட்டி வளர்த்தார் 
உன்னை நம் தந்தை... 

இன்றோ சிறகு முளைத்து விட்டது 
வாழ்க்கை யென்னும் வண்ணப்பூந்தோட்டத்தில் 
வட்டமிடச்செல்கிறேன் என்று சொல்லாமல் சொல்லி 
பன்னீரால் பாதபூஜை செய்து விடை பெற்றுவிட்டாய். 

நீ இட்டதுதான் கட்டளை, 
வைத்ததுதான் சட்டம் , 
அதை வடிவமாக்க வேண்டியதுதான் கடமை என்ற 
உன் அதிகாரத்திற்கு அடிமைப்பட்டுக்கிடந்தது நம் அரண்மனை. 

அங்கே அமைச்சனாக இருக்கவேண்டிய 
நான் அதிகாரமற்றவனாகவே வாழ்ந்து விட்டேன். 
இன்றோ வாழ்க்கையென்னும் போர்களத்தில் 
கணவனென்னும் தலைவனுக்கு சாரதியாய்....கேடயமாய்...
செல்லப்போகும் உனக்கு அறிவுரைகள் கூறவேண்டியது 
இந்த அமைச்சனுடைய கடமை என்றுணர்ந்து...
என் இதயத்தை வண்ணமலர் 
வாழ்த்தாக்கிக் கொண்டு வந்தேன் ..........

புகுந்த வீ ட்டின் சிறப்புகளையே பேசு.
அது பிறந்த வீ ட்டின் பெருமையை தானாக கொண்டு வரும், 
நம்மை கொத்திக்குதற வட்டமிடும் வல்லூறு 
பொங்கி வரும் கோபம்..... ஆக அது பொல்லாதது, 

எது வாயினும் சரி 
அது ஏற்றதாழ்வாயினும் சரி 
எதையும் தாங்கும் இதயம் வேண்டும்,
பொங்குமாங்கடலினும் பெரிது பொருமை 
அது வாழ்வைப் புனிதமாக்குகின்றது, 

சீறிவரும் அனலைப் புனல்கொண்டு தனிக்கலாம்...

பொங்கிவரும் புனலை எதுகொண்டு தடுக்கலாம் ?!!
அக்காட்டாற்றுப் புனல் போலாம் பொறாமையும்..
பொருப்பின்மையும்.., துள்ளி வரும் சூறைக்காற்றாம் 
பகட்டும்...படோடோபமும்.., 

பெண்புத்தி பின்புத்தி நீ சிறிதாக நினைப்பதுதான்.....
ஒரு சிலருக்குப் பெரிதாகத் தெரியும் , 
உன் கை கொண்டு உன் கண்ணை நீயே 
குத்திக்கொள்ள ஆசைப்பட்டால் பிறர் மேல் 
கோள் சொல்லும் கொடிய பழக்கத்தை நீ ஏற்றுக்கொள்ளலாம்,

 எதற்கும் அறிவுரை கூறவேண்டியது 
மனைவியின் பொருப்பு, ஆனால் 
முடிவெடுக்கவேண்டியது கணவனின் கடமை...
முடிவான பின் அது தவறாயினும் !!! சரியே 
அதை தட்டிக்கழிப்பதும், வெட்டிப்பேசுவதும் பெண்ணுக்கு அழகல்ல, 

ஆசையே அழிவுக்கு அஸ்திவாரம், 
வண்ண வண்ண பட்டாடையும் 
வயிரம்பதித்த பொன்னகையும் 
அணிந்து அழகு பார்பதுமட்டும் வாழ்க்கையல்ல... 

நாங்கள் பூட்டிவிட்ட பொன்னகையின் எடை 
பத்தென்பது பாவையுனக்கு குறையெனப்படலாம் 
ஆனால் உன் ஒளிமயமான வாழ்க்கையின் 
இன்பத்தில்தான் எங்கள் இதயம் நிறைந்திருக்கின்றது...

வந்ததையும்..,வாழ்ந்ததையும்.., 

வரும் வாழ்க்கையையும்.., எண்ணிப்பார் ,!!!
 காலத்தின் கரங்களிலே நாமெல்லாம் அலைகடல் 
துரும்பென்ற சூழ்நிலையில் நின்று சிந்தித்துப்பார்,!! 

அப்பொழுது தெரியும் இரத்தத்தில் 
கலந்த இந்த உறவும்..
சித்தத்தில் பிறந்த அன்பும்,
இதயத்தின் பாசமும், 
ஆயிரமாயிரம் பொன்னுக்குச்சமம் என்பது ...

மாப்பிள்ளை நல்லவர்...வல்லவர்.. 

பொருப்பிற்க்கும், பொருமைக்கும் சிகரம், 
அந்த சிகரத்தின் உச்சியிலே பதிக்கப்பட்ட மாணிக்கம்தான் 
எங்கள் வானத்து வெண்நிலவு...

குடும்பம் ஒரு கோவில் ,

கொண்டவனே தெய்வம் என்ற நினைவோடு, 
தமிழ்த்தாய் வழிவந்த நாணமும், மானமும், நால்வகைப்பன்புமே ... 
சீராகவும் அள்ளிச்செல்லும் பாவையே !!!? 

இன்னும் ...இன்னும் எண்ணற்ற 
கோடி எழுதவேண்டும் 
என இதயம் துடித்தாலும், 
மன ஆழத்தில் என்னங்கள் புதையுண்டு கிடந்தாலும் 
ஏட்டிலே இடமில்லாத காரணத்தினால்........... 

பல்லாண்டு...பல்லாண்டு... 
யுகயுகமாய்... வாழ்வாங்கு வாழ வாழ்த்தும் ..
அன்பிற்கும் பாசத்திற்க்கும் அடிமையான .....கு.சண்முகம்

Tuesday, December 18, 2012

கரிசல் காட்டு எழுத்தாளர் கி.ரா வின் கதைகளில் ஒன்று (18+)

"இப்ப நா ஒரு கதெ சொல்றேன்" என்று ஆரம்பித்தார். கதை சொல்லி தாத்தா!

ஆர்வமாக கேட்டுக் கொண்டிருந்தான் கிட்டான் என்ற `விடலை`

" ஒரு காட்லெ நூறு கழுதைக இருந்துச்சு, அதுல தொன்னுத்தி ஒம்பது கழுதைக ஆம்பிளைக் கழுதைக. ஒரே ஒரு கழுதை மட்டும் பொட்டைக் கழுதை."
  அந்த நாயி,பூனை,கழுதைக இதுக்கெல்லாம் ஒரு 'சீசன்' உண்டு. அந்தச்  சீசன்(காலம்) வந்துட்டதுன்ன பாவம், இந்த ஒரே ஒரு போட்டிக் கழுதை தொன்னுத்தி ஒம்பது கழுதைகளுக்கும் ஜவாப் தரமுடியாம ரொம்பதான் அல்லடிப்போகும். அய்யோ அய்யோ என்று கதறும்; இந்த கதறல் காடெல்லாம் எதிரொலிக்கும்.

 இதுக்கு மத்தியில், இந்த பொட்டக் கழுதையை அடைய ஆம்பிளை கழுதைக்குள்ள பயங்கர சண்டை நடக்கும். பலசாலிகள் இப்படி சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறப்ப நோஞ்சான் பூஞ்சான் கழுதைக பூந்து வெளையாடும்! உடனே பலசாளிக் கழுதைகள் ரண்டு ஓடிவந்து  இந்த நோஞ்சான் பூஞ்சானை நாலு உதை கொடுக்கும். இதுகள் வலி பொறுக்க முடியாமல் காள் காள்ன்னு கத்தும். கத்திக்கொண்டே, நாங்கள்ளாம் கழுதைகள்  இல்லையா; நீங்க தாம் கழுதைகளா; எங்களுக்கும்  ஆசை இராதா என்று ஞாயம் பேசும்.

என்ன பேசி என்ன செய்ய; பலசாளிகள்ட்டெய்யும்  முரடங்க கிட்டெயும் ஞாயம் எடுபடுமா?

இப்படியாக காடே ஒரு தூசிக்கோட்டையா ஆயிக்கிட்டுருக்கு.

இந்த 'ரணகளத்த' மரத்து மேலே இருந்த ஒரு கரிச்சான் பறவை பார்த்துகிட்டே இருந்தது. அந்த போட்டிக் கழுதெ படுற பாதறவைப் பார்க்கச் சகிக்கலெ. 'என்ன அநியாயம், கொஞ்சம் ஈவு இறக்கம் வேண்டாமா? தொன்னுத்திவொம்பது கழுதகளோட ரோதனைய ஒரு போட்ட கழுத தாங்குமா என்கிற ஞாயம் கொஞ்சம் கூட தெரியலயெ இந்த மட கழுதைகளுக்கு. விருதாத் தடி கழுதைகளா வந்து சேந்துச்சுன்னு, அந்த கரிச்சானுக்கு ரொம்ப வருத்தாமே போச்சி.

 ஆனாலும் நாம என்ன செய்ய முடியும்ன்னு யோசிசிச்சுகிட்டே அதுக பக்கத்துல வந்தது. கரிச்சானை பார்த்ததும் பொட்ட கழுதெ ஒன்னு அழுதது; இந்த வங்கொடுமெ உண்டுமா தங்கச்சின்னுட்டு.

சுத்தி நின்ன உலக்கை கழுதைகளையெல்லாம் , தூரப் போங்க, தூரப் போங்கன்னுட்டுக்  கீச்சுக் குரல்ல கரிச்சான் கத்திச்சு. "நான் சொல்றத கேக்கீளா கொஞ்சம்ன்னுட்டு  கேட்டது. சரீன்னு ஒப்புக் கொண்டது கழுதகேயெல்லாம்.

பொட்டை கழுதையோட முதுகுல உக்காந்துகிட்டு அதுகளோட விவகாரத்தை கேட்டது.

ஒரு பெரிய கழுதை ஞாயம் சொன்னது கரிச்சானிடம், "இந்த பாரு கரிச்சானு;
 நான் சொல்றத நல்ல கேட்டுக்க; பிறகு ஆ...ஊ...ங்கப்படாது. நாங்க உங்க குருவிக மாதிரியில்லெ; நெனைக்கிற போதெல்லாம் தெனேமும் 'இருந்து'கிட்டுருக்க. எங்களுக்கு ஏற்பட்டது வருஷத்துக்கு ஒருக்கதான்.  அதும் குறிப்பிட்ட ஒரு மாசம் தான். அதுக்குள்ளார நாங்க செஞ்சு முடிச்சுறனும். இப்போ விட்டச்சின்னா அடுத்த வருஷந்தான்; நல்ல கேட்டுக்கோ கரிச்சனோவ்'" என்றது.

 அதுக்கு கரிச்சான், "அது சரிதான் பெரியாளு; நீ சொல்றதெல்லாஞ் சரிதான். அந்த பொட்டே ஒத்தப்பேரியா இருந்துகிட்டு உங்க இத்தன பேருக்கும் ஜவாப் தரமுடியுமா? ஒரு நெல்லக் குத்துறதுக்கு நூறு உலக்கை இறங்குனா நெல்லுதான் தாங்குமா?" என்று கேட்டதும் ஒரு பெரிய்ய முரட்டுக் கழுதைக்கு கோவம் வந்துவிட்டது.

"நீ  என்ன ஞாயம் பேசுறே; போ ஒஞ்சோலியப் பாத்து. நாங்கலாச்சி எங்க காரியமாச்சி" என்று சொல்லி, முதல்ல விலகிக்கொ என்று கால்களை தூக்கிப் போட ஆரம்பித்துவிட்டது.

முதுகில் இருந்த கரிச்சான் எவ்வளவோ தடுத்துப் பார்த்தது. மொரட்டு கழுதெ கேக்குறாப்ல இல்ல. என்ன செயறதுன்னுட்டு கரிச்சானுக்கு தெரியல.

கரிச்சானுக்கு தடுத்து நிறுத்த ஒரு வழி தான் தெரிஞ்சது. முதுகில் இருந்த  கரிச்சான் பொட்டக் கழுதையின் "அறை"யை தன் உடம்பால் பொத்தி மறைத்துக் கொண்டது.

மொரட்டுக் கழுதை அதை ஒன்னும் கவனிக்கல. அதுபாட்டுக்கு ஏறி இறங்கிட்டது. கரிச்சானை பார்த்தா காணோம்! எங்க போச்சி? என்று தெரியாமல் கேட்டான் கிட்டான்.

கிட்டான் முகத்தை பார்த்தார் தத்தா.

தாத்தா சொன்னார்.

கரிச்சான் எங்கேயும் போகல. பொட்டக் கழுதையோட கருப்பைக்குல்லாற போயிட்டது! என்றார்.

"சர்வ மூடர்களின் மத்தியில் நீதியை எடுத்துச் சொல்லியதோடு மட்டுமில்லாமல் அதை நிலைநாட்ட முயல்கிறவர்களுக்கு இப்படி தான் இழிவான சாவு கிடைக்கும்" என்றார் தாத்தா.
''வயது வந்தவர்களுக்கு மட்டும்`` என்ற கி.ரா வின் கதை தொகுப்பிலிருந்து....... 

Monday, November 5, 2012

பராசக்தி பாணியில் நித்தியானந்தா


நித்தியானந்தாவின் பராசக்தி வசனம்!!!


நமது சிறப்பு சாமியார் நித்தியானந்தாவின் உள்மனம் சொல்லும் குமுறலை கேளுங்கள், கண்டிப்பாக உங்களுக்கு சிரிப்பு வரும்.

தன்மீது சுமத்தப்படும் குற்றங்களுக்கு பராசக்தி பாணியில் நித்தியானந்த பதிலளிக்கிறான் பாருங்கள்.

______???______ நீதிமன்றம்... விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்திருக்கிறது.. புதுமையான பல வழக்குகளை சந்தித்து இருக்கிறது.. ஆனால், இந்த வழக்கு ஒன்றும் விசித்திரமானதல்ல... வழக்காட வந்திருக்கும் நானும் ஒன்றும் புதுமையானவன் அல்ல.. 

வாழ்கை பாதையிலே சர்வ சாதாரணமாக ஏமாற்றிப்பிழைக்கும் சாமியார்களில் நானும் ஒருவன்.. சாமி என்று கூறி ஊரை ஏமாற்றினேன்.. 

கதவைத்திற காற்று வரட்டும் என்றேன்.. நடிகைகளை எனது காலைப் பிடித்துவிடும்படி கூறினேன்.. குற்றம் சாட்டப்படிருகிறேன் இப்படியெல்லாம்.. ஆனால் நீங்கள் எதிர் பார்ப்பீர்கள் நான் இதை எல்லாம் மறுக்கப்போகின்றேன் என்று... இல்லை நிச்சியமாக இல்லை... 

சாமி என்று கூறி ஊரை ஏமாற்றினேன்.. ஏன்??? மக்களை ஏமாற்றவேண்டும் என்பதற்காகவா?

இல்லை.. மக்களிடம் காணப்படும் மூடநம்பிக்கை வளரவேண்டும் என்பதற்காக.. கதவைத்திற காற்று வரட்டும் என்றேன்.. ஏன்..?? காற்றுவரவேண்டுமென்பதற்காகவா? இல்லை.. அந்த நடிகை ஈசியாக ருமுக்குள் வரவேண்டும் என்பதற்காக... 

நடிகைகளை எனது காலைப் பிடித்துவிடும்படி கூறினேன்.. ஏன்??? எனக்கு கால் வலி என்பதனாலேயா?....இல்லை அவள் நான் ஒரிஜினல் சாமியார் என்று என்மீது வைத்திருக்கும் அபரிமிதமான நம்பிக்கையை நீக்குவதற்காக.... 

உனக்கேன் இவ்வளவு அக்கறை??, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை என்று நீங்கள் கேட்பீர்கள்.. நானே பாதிக்கப்பட்டேன், நேரடியாக நேரடியாகப் பாதிக்கப்பட்டேன், எனது சுயநலதிலே பொது நலமும் கலந்து இருக்குறது,

என்னை குற்றவாளி என்கிறீர்களே, என் வாழ்கை பாதையை சற்று திரும்பி பார்த்தீர்களானால் நான் வாங்கிய அடிகள் எத்தனை, மிதிகள் எத்தனை, உதைகள் எத்தனை என்று கணக்கு பார்க்க இயலும்... 

நான் பாடசாலைக்குக் கூடப் போனதில்லை ஆனால் ஆன்மீகப்புத்தகம் படித்திருக்கிறேன்.. நான் நல்ல சன்னியாசியாக இருந்ததில்லை ஆனால் ஊருக்கு உபதேசம் செய்திருக்கிறேன்.. கேளுங்கள் என் கதையை, என்னை அடித்து துவைப்பதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்..

இந்தியாவிலே தமிழ்நாட்டிலே பிறந்தவன் நான், பிறக்க ஒரு ஊர் பிழைக்க ஒரு ஊர், போலிச்சாமியார்களின் தலைஎழுத்துக்கு நான் மட்டும் என்ன விதி விலக்கா??? தமிழ்நாட்டில் இல் பிறந்த நான், ஜோசியம் பார்க்க ஜோதிடரிடம் ஓடோடி வந்தேன், ஜாதகம் என்னை நீயொரு மதபோதகம் என்றது... 

என் பெயரோ நித்தியானந்தா, கேட்டாலெ உதைக்க தோன்றும் பெயர். ஆனால் என் போதனைக்கு அடிமையாகாத ஏமாளிகளே கிடையாது 

நான் மட்டும் நினைத்து இருந்தால் சாமியாராக வராமல் இருந்திருக்கலாம், ஏதாவது ஒரு மட்டமான படத்தில் சாமியாராக நடித்திருக்கலாம், கஞ்சா பிசினஸ், கழவெடுத்தல் என்று காலத்தை ஓட்டி இருக்கலாம். ஆனால் அதைதான் விரும்புகிறதா இந்த பரந்த உலகம், 

நடிகை மாட்டரில் படத்தைப் போட்டு எரித்தார்கள்.... ஓடினேன்... மக்களின் காசில் கட்டிய மடத்தை சுக்குநூறாக உடைத்தான்.... ஓடினேன் நேற்று வந்த சின்ன பொடியன் என் ஜல்சா வீடியோவை யூ டியூப்பில் போட்டான்...... ஓடினேன் ஓடினேன் ஓடினேன்.... கேரளாவுக்கு ஓடினேன் கர்நாடகாவுக்கு ஓடினேன் பெங்களூருக்கும் ஓடினேன் ஓடினேன் ஓடினேன்...... இந்தியாவின் அனைத்து ஊர்களுக்கும் ஓடினேன்...

எனது பக்தர்களின் கொலைவெறித்தாக்குதல் தாங்காமல் திரும்பி வந்து விட்டேன். என் ஓட்டத்தை நிறுத்தி இருக்க வேண்டும், 
வீடியோவை யூரியூப்பில் போக்கி இருக்க வேண்டும், என்னை தப்பியோட கதவைத்திறந்து விட்டிருக்க வேண்டும் இன்று என் முன் சட்டத்தை நீட்டுவோர். 

செய்தார்களா? தப்பியோட விட்டார்களா இந்த நித்தியானந்தாவை, 

என்னை சாமி என்று நம்பி ஏமாந்தது யார் குற்றம்?? எனது குற்றாமா? என்னை நம்பி ஏமாந்த மூடர்களின் குற்றமா? நான் சொன்னதை நம்பி கதவைத்திறந்து வைத்தது யார் குற்றம்? கதவைத்திற காற்றுவரட்டும் என்று சொன்ன எனது குற்றமா? கேனைத்தனமாக என் பேச்சை நம்பிக்கதவைத்திறந்த மூடர்களின் குற்றமா? எனது காலைப்பிடித்து விட்டது யார் குற்றம்?, காலைப்பிடித்துவிடும்படி கூறிய எனது குற்றமா? இல்லை மாத்திரை தந்துவிட்டு காலைப்பிடித்து விட்ட நடிகையின் குற்றமா?? இந்த குற்றங்கள் எல்லாம் களையப்படும் வரையில், என்னை போன்ற நித்தியானந்தாக்கள், ஏமாற்றும் போலிகளாகத்தான் உருவாகிக்கொண்டிருப்பார்கள்.....

படித்ததில் பிடித்தது......

Wednesday, October 31, 2012

விழித்திருப்போம்........


சட்டம் நம் கையில்.............

Consumer Protection Act 1986
இச்சட்டம் தான் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் என அழைக்கப்படுகிறது. 1986 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ம் தேதியன்று அமுலுக்கு வந்தது. ஏற்கனவே அமுலில் உள்ள சட்டத்தின் மூலம் நிவாரணம் பெற வாய்ப்பு இருந்தும் தனியாக ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டதின் அடிப்படை நோக்கமே – எளிய முறையில், குறுகிய காலத்தில், செலவில்லாமல் நிவாரணம் பெற வேண்டும் என்பதே. சாதாரமாக, நுகர்வோர் வழக்குகள் பதிவு செய்யப்படும் பொழுது அது சிவில் வழக்காக மாறிவிடும். இதனால் வழக்கு, நீதிமன்ற நடைமுறைப்படியே நடை பெற்வதால் காலதாமதம் ஏற்படுவதுடன், பெரும் செலவும் ஏற்படும். பெரும் தொகை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் ஒரு சிலர் தவிர மற்றவர்கள் நீதி மன்றத்தை அணுகுவது இல்லை. இச்சட்டத்தின் மூலம் இந்த குறைபாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளது. இனி அது பற்றி பார்க்கலாம்.
நுகர்வோர் நீதிமன்றங்களின் ( Consumer Court ) அமைப்பும், செயல்பாடும்:
கீழ் நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்று இருப்பதை போலவே இச்சட்டப்படி – மாவட்ட அளவில் ” மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றங்கள்”, மாநில அளவில் “மாநில ஆணையம்”, தேசிய அளவில் ” தேசிய ஆணையம்” அமைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றம்:
20 லட்சம் ரூபாய் வரை நஷ்ட ஈடு கோரும் வழக்குகளை, மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் தான் பதிவு செய்ய வேண்டும். நீதிமன்ற கட்டணம் எதுவும் செலுத்தவேண்டியது கிடையாது. இதனால் வழக்கு தொடருவதற்கு தகுதியே இல்லாத பிரச்சனைக்கெல்லாம் வழக்கு தொடர ஆரம்பித்தனர். இதில் எதிர் தரப்பினரை பிளாக் மெயில் செய்பவர்களும் அடங்கும். இது போன்ற வழக்குகளுக்கு அவர்கள் ஆஜராவது கிடையாது. இதனால் வழக்கு தள்ளுபடியாகும் நிலை ஏற் பட்டது. இதனால் தவறே செய்யாத எதிர் தரப்பினர்களுக்கு கால விரயம் மற்றும் செலவு ஏற்படுவதையும், நீதிமன்றத்தின் நேரம் வீணாவதையும் கருத்தில் கொண்டு 2006 ம் ஆண்டில் கீழ் கண்டவாறு கட்டணம் நிர்ணயம் செய்ய்ப்பட்டு ள்ளது.
  • 1 லட்சம் ரூபாய் வரை நஷ்ட ஈடு கோரும் வழக்குகளுக்கு = 100 /-
  • 1லட்சத்திற்கு மேல் 5 லட்சம் வரை = 200 /-
  • 5 லட்சத்திற்கு மேல் 10 லட்சம் வரை = 400 /-
  • 10 லட்சத்திற்கு மேல் 20 லட்சம் வரை = 500 /-
வழக்கு தொடர தேவையான தகுதிகள்:
  1. வழக்கு தொடருபவர் நுகர்வோராக இருக்கவேண்டும். வழக்கு அவர் சம்பந்தப் பட்டதாக் இருக்கவேண்டும்.
  2. நுகர்வோர், எந்த நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட எல்லைக்குள் ( Jurisdiction) இருக்கிறாரோ அதில் தான் வழக்கு தொடரவேண்டும்.
  3.  புகாருக்கான ஆதாரங்கள் இருக்கவேண்டும்.
  4. பிரச்சனை ஏற்பட்டதிலிருந்து 2 வருடங்களுக்குள் வழக்கு தொடர வேண்டும்.
யார் மீது வழக்கு தொடர முடியும்?
1. நமக்கு பொருட்களை விற்பனை செய்பவர்கள் அனைவரும். இதில் தனியார், அரசு நிறுவனம் என்ற பாகுபாடு கிடையாது. அனைவருமே இதில் உட்படுவர்.
உதாரணம்: மளிகை கடை, டிபார்ட்மெண்டல் ஸ்டோர், பேக்கரி, சைக்கிள் – பைக் – கார் – லாரி விற்பனையாளர், மெடிகல் ஷாப், ரேஷன் கடை போன்றவை.
2. பணம் வாங்கிக்கொண்டு வழங்கப்படும் சேவைகள், தனியார் மற்றும் அரசு துறை நிறுவனங்கள் அனைத்துமே இதில் அடங்கும்.
உதாரணம் : மின்சார வாரியம், குடிதண்ணீர் சப்ளை, இன்ஸூரன்ஸ் கம்பெனி, வங்கிகள், மருத்துவ மனைகள், கியாஸ் கம்பெனிகள், சப் -ரிஜிஸ்டிரார் அலுவலகம், போன்றவைகள்.
எந்தெந்த துறைகள் எல்லாம் இதில் அடங்கும் என சட்டத்தில் பட்டியலிடப் படவில்லை. காரணம். சேவை என்ற வார்த்தைக்கு முழுமையான விளக்கம் கொடுக்க முடியாது. வார்த்தைக்கான விளக்கம், வழக்குக்கு வழக்கு விரிவடையும் என்பதே உண்மை. உதாரணத்திற்கு சப்-ரிஜிஸ்டிரார் ஆபீஸை எடுத்துக்கொள்ளலாம். இந்த சட்டம் வந்த பின்பு, பலர் இந்த அலுவலகத்தில் அவஸ்தை பட்டு வந்தாலும், இது அரசு அலுவலகம் என நினைத்து விட்டு விட்டனர். பல வருடங்கள் இப்படியே கழிந்தது.
ஒரு சில வருடங்களுக்கு முன்பு ஒருவர் ஒரு சொத்து வாங்க முடிவு செய்து, அதற்கு சம்பந்தப்பட்ட சப்- ரிஜிஸ்டிரார் அலுவல்கத்தில் வில்லங்க சர்டிபிகேட்டிக்குரிய கட்டணத்தை செலுத்தி விண்ணப்பம் செய்தார். எந்த வில்லங்கமும் இல்லை என சர்டிபிகேட் கொடுத்து விட்டனர். அதை நம்பி, அவர் அந்த சொத்தை வாங்கி விட்டார். அதன் பின்பு தான் அதில் வில்லங்கம் இருப்பது தெரிய வந்தது. அதனால் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. தவறான வில்லங்க சர்டிபிகேட் டிப்பார்ட்மெண்ட் கொடுத்ததினால்த் தான் நஷ்டம் என்றும், வில்லங்க சர்டிபிகேட் வழங்குவது என்பது பணத்தை பெற்றுக்கொண்டு வழங்கப்படும் சேவை என்பதால், நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி குறைபாடான சேவை என்பது அவர் முடிவு. அவர் நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அரசு தரப்பில், நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி தங்கள் மீது வழக்கு தொடர முடியாது என்றும், சர்டிபிகேட்டில் தவறுகள் இருந்தால் இலாகா பொறுப்பு அல்ல” என குறிப்பிட்டே வழங்கட்டுள்ளதால் தாங்கள் பொறுப்பல்ல என வாதம் செய்தனர். ஆனால் அவர்களின் ஆட்சேபனையை நிராகரித்த் நீதிமன்றம் மனுதாரருக்கு நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டது. இது சட்டம் பற்றிய விளக்கம் விரிவடையக் கூடியது என்பதற்கு ஒரு உதாரணம்.
வழக்கு தொடர தேவையான முன் நடவடிக்கைகள்:
உதாரணத்திற்கு நாம் ஒரு கடைக்குப்போய் ஒரு பொருள் வாங்குகிறோம் என்று வைத்துக் கொள்வோம். அதன் பாக்கிங்கில் போடப்பட்ட விலைக்கு அதிகமாக பணம் வாங்கினாலோ, எடை மற்றும் அள்வு குறைவாக இருந்தாலோ அல்லது தரம் குறைவாக இருந்தாலோ உடனடியாக அதைப் பற்றி கடைக்காரரிடம் சுட்டிக்காட்டுங்கள். அவர் தவறை சரி செய்ய மறுத்தால், அவருக்கு நீங்களே ” குறைபாடுகளை சுட்டிக்காட்டி அதை சரி செய்யாவிட்டால் நுகர்வோர் வழக்கு தொடரப்படும்” என அத்தாட்சியுடன் கூடிய பதிவு தபாலில் நோட்டீஸ் அனுப்புங்கள். அவருக்கு நோட்டீஸ் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது என்பதற்கான் ஆதாரத்தை நோட்டீஸ் காப்பியுடன் வைத்துக்கொள்ளுங்கள். அதைப் போலவே பொருள் வாங்கியதற்கான ரசீதும் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
விலை சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால், விலை அச்சடிக்கப்பட்ட பாக்கிங் கவரை பத்திரமாக வைத்திருங்கள்.
தரம் சம்பந்த பிரச்சனை என்றால், அதே பாக்கிங் கவருடன் பொருளை பாக் செய்ய்து வைத்துக்கொள்ளுங்கள்.
எடை சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால், நீங்கள் பாக்கிங்கை பிரிப்பதற்கு முன்பே எடை குறைவு என்பதை ஊர்ஜிதம் செய்து விட்டு பாக்கிங்கை பிரிக்காமல் இருக்க வேண்டும். ஒரு வேளை பிரித்துவிட்ட பின்பு தான் எடை குறைவை கண்டு பிடித்தீர்கள் என்றால், பிரிக்கப்பட்ட பாக்கிங்கை ஆதாரமாக வைத்து வழக்கு தொடர முடியாது. எனவே மறுபடியும் அதே கடைக்கு போய், அதே பொருளை, பில் போட்டு வாங்கிக்கொளுங்கள்.
இப்பொழுது சேவை சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால், சேவைக்கான ரசீது இருக்கவேண்டும். முன்பு குறிப்பிட்ட படியே சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்புங்கள். எல்லா அத்தாட்சிகளையும் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.
நன்றி
சட்டம் நம் கையில்.........

Wednesday, October 24, 2012

காகிதமும் ஆயுதமாகும்

லஞ்சத்துக்கு எதிராக எத்தனையோ அமைப்புகள், நாடு முழுவதும் போராடிக் கொண்டிருக்கின்றன; ஆனாலும், லஞ்சம் ஒழிந்தபாடில்லை; காரணம், இந்த போராட்டங்களிலே மக்களின் பங்களிப்பில்லை. லஞ்சத்தை ஒழிக்க ஆயுதம் ஏந்திப் போராட வேண்டியதில்லை; ஒரே ஒரு காகிதம் போதும். தகவல் உரிமைச் சட்டம் என்பது, இந்திய மக்களுக்குக் கிடைத்த மாபெரும் ஆயுதம்; அதைப் பயன்படுத்தி, லஞ்சத்திலிருந்து தப்பித்திருக்கிறார் ஒரு வாசகர்.

அவரது அனுபவம்...

நான், திருப்பூர், தொங்குட்டிபாளையத்தைச் சேர்ந்தவன். கடந்த 2010, டிச.19ல் கொஞ்சம் மது அருந்தி விட்டு, எனது வண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். வழியில், போதையில் வாகனம் ஓட்டியோரை போலீசார் பிடித்தனர். ஒவ்வொருவரிடமும் அபராதம் என்ற பெயரில், தலா 2,000 ரூபாய் வாங்கினர்; எதற்கும் ரசீது இல்லை.

பலரும் பணம் கொடுத்துச் சென்று விட்டனர். எனக்கு லஞ்சம் தர விருப்பமில்லை. பணம் தராததால், எனது வண்டியை அருகிலுள்ள டூ வீலர் ஸ்டாண்ட்டில் நிறுத்தச் சொன்னார்கள்; நிறுத்தி விட்டு, வீடு திரும்பி விட்டேன். அதன்பின், பல முறை அணுகியும் போலீசார் என் மீது நடவடிக்கை எடுக்கவில்லை; வண்டியையும் தரவில்லை.

நான் வாக்குவாதம் செய்ததால், எனது ரேஷன் கார்டை வாங்கிக் கொண்டு, வண்டியைக் கொடுத்தனர். பல நாட்கள் அலைந்தும் ரேஷன் கார்டைத் தரவில்லை; நான் தகவல் உரிமைச் சட்டத்தில், "குறிப்பிட்ட தேதியில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக எத்தனை பேர் மீது வழக்கு பதிவானது' என்பது உட்பட பல விபரங்களைக் கேட்டு, எஸ்.பி., ஆபீசுக்கு மனுச் செய்தேன்; பதில் வந்தது.

அன்றைய நாளில் 151 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, 2 பேரிடம் மட்டுமே கோர்ட் மூலமாக 1,900 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதாக பதிலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. சோதனை நடந்து 8 மாதங்கள் கழித்தும் அதே நிலைதான்; இந்த விபரங்களை வைத்து, திருப்பூர் எஸ்.பி.,யிடம் நேரடியாக மனு கொடுத்தேன்; அவர் எடுத்த அதிரடியில், அடுத்த ஒரு மணி நேரத்தில் எனது ரேஷன் கார்டு, எனது கைக்கு வந்தது.

எப்படியோ, லஞ்சம் தரக்கூடாது என்று நான் போராடிய போராட்டத்துக்கு வெற்றி கிடைத்தது................ 


தினமலர் 08.01.2012 ல் வெளிவந்த கட்டுரை.................. சாத் சாத் நானே தான்.......................... 

ஆடுறா ராமா.... ஆடுறா ராமா....

28.09.2012
திருப்பூர் அருகே வெள்ளகோவிலில் 
அத்தை வீட்டுக்கு சென்றிருந்தேன். 
பேச்சு வாக்கில் eb யில் ஒரு பிரச்சனை என்றார்கள். 
நமக்கு தான் பிரச்சனை என்றாலே ”அல்வா” மாதரி... 
விவரம் கேட்டேன்.

புது வீடு கட்டி கமர்சியல் மின் இணைப்பு வாங்கியிருந்தார்கள். 
கமர்சியல் இணைப்பை வீட்டு இணப்பாக மாற்ற 
3 மாதமாக அலைந்துள்ளார்கள். 
என்ன என்னவோ காரணங்கள் கூறி 
ஏதோ எதிர் பார்ப்பது போல நடந்து கொண்டார்களாம்....
இன்னும் மாற்றி தரவில்லை என்றார்கள்....


ஒரு வெள்ளை பேப்பரில் ...
மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின்
விதி 21ன் கீழ் காலதாமதத்திற்கு காரணமும் ...
விதி 21ன் உட்பிரிவுகளின்படி ....
நுகர்வோருக்கான காலதாமத இழப்பீட்டு தொகை வழங்கும்படியும்,
காரணமான அதிகாரிகள் மேல் நடவடிக்கை எடுக்கும்படியும்
மனு எழுதி மதியம் 1 மணியளவில் நேரில் கொடுத்தேன்....

திருப்பூருக்கும் வந்து விட்டேன்.
4 மணியளவில் தொலைபேசியது......
EB அலுவலகத்திலிருந்து உயர் அதிகாரிகள் வந்து ஆய்வு செய்து விட்டு வீட்டு இணைப்பாக மாற்றி விட்டோம் என்று கூறினார்களாம்..........

குச்சி எடுத்தாத்தான் குரங்கு ஆடுமுன்னு
சும்மாவா சொல்லி வச்சுருக்கறாங்க....


எங்க வீட்டுக்கு மின் இணைப்பு பெற்ற கதையை படிக்க...

புதிய வீடும் மின் இணைப்பும்

புதியவீடும் மின் இணைப்பும்

‎21 ஆகஸ்ட் 2006....

திருப்பூரே பூர்வீகமாக கொண்டு தாத்தான் பாட்டன் 
எல்லாம் காட்ட வித்து கள்ளு குடிச்ச பழம் பெருமைகளை 
மட்டுமே பேசிக்கொண்டு ஆறு மாதங்களுக்கு ஒரு முறையோ 
ஆண்டுக்கொரு முறையோ வீதிவீதியாக அலைந்து வாடகைக்கு 
வீடு புடிச்சு சட்டி பானை தூக்கி கொண்டு 
தட்டு முட்டு சாமான்களை வண்டியில ஏத்தி
புது வீட்டுக்கு கொண்டு போய் சேத்தி அப்பப்பா ........ 
எங்க குடும்பத்துல நாங்க அண்ணன் தம்பி ஐந்து பேரோடு 
மொத்தம் பத்து பேர் கூட்டுக்குடும்பம்.... 
இதுக்கெல்லாம் ஒரு விடிவு காலம் தான் இந்த நாள்.......... 

திருப்பூர் மாநகருக்கு அருகில் தொங்குட்டிபாளையத்தில் 
யார் செய்த புண்ணியமோ ஒரு ஏக்கர் நிலம் வாங்கி 
பூமி பூஜை போட்டு வீடு கட்ட ஆரம்பித்தோம் ...... 
பாண்டவர் பூமி போல.............

வீடு கட்டும் பணியை விருப்பமுடன் நான் ஏற்றேன்..... 
(மேற்பார்வை என்ற பெயரில் பொழுதை போக்கத்தான்)

வீட்டிற்கு மின் இணைப்பு வேண்டுமே ...... 
திருப்பூர் தாராபுரம் சாலை பொல்லிகாளிபாளையம்
மின்சார அலுவலகத்தில் கேட்ட போது
வீட்டு வரி ரசீது வேணுமுன்னாங்க....... 
(அஸ்திவாரமே முடியல)
ஒன்பதாம் வகுப்பு படிச்ச மூளை வேலை செய்தது..... 
மின்சார சட்டங்களை தேடி படிச்சு ....
வீடு கட்ட தற்காலிக இணைப்புக்கு 50ரூபா கட்டி விண்ணப்பித்தேன்...

அலுவலகத்தில் என்னையும் என் மனுவையும் தவிர்க்கவே பார்த்தார்கள். விடுவேனா கஜினி போல படையெடுத்தேன்.... ஒருவழியாக சைட் விசிட் என வந்தார்கள்.... நான்கு கம்பம் போடனும் நார்மலா ஒரு கம்பத்துக்கு 8000 வரும் நீங்க 24000 குடுங்க போதும் என்றார்கள்...
நானாவது காசாவதுன்னு மனசுக்குள் நினைச்சுகிட்டு சரி சார் என அப்போதைக்கு அவர்களை அனுப்பி வைத்தேன்... 

இதே பொல்லிகாளிபாளையம் மின் அலுவலகங்களுக்கு உட்பட்ட அள்ளாலபுரம், அக்கனம்பாளையம் வடுகபாளையம் போன்ற 
சின்ன சின்ன ஊர்களில் பயன்படாமல் புது புது கம்பங்கள் சும்ம 
கிடைந்ததை போட்டோ எடுத்துக்கொண்டேன்.... 

தகவல் உரிமை சட்டம் பிரபல்யம் ஆகாத கால கட்டம் அது...
திருப்பூர் குமார்நகர் தலைமை மின் அலுவலகத்தில் நேரடியாக 
சில கேள்விகள் கேட்டு மனு கொடுத்தேன்.... 
அப்போது 50ரூபாய்க்கு செலான் எடுக்கனும்.... 

என்னை அமர வைத்து உடனே சம்பந்தபட்டவர்களை 
போனில் காய்ச்சி எடுத்து என் மனுவையும் 50ரூபா 
செலானையும் திருப்பி கொடுத்து அனுப்பி வைத்தார் 
அந்த அதிகாரி. பெயர் மறந்துவிட்டது.... 

என்னை எங்கள் வீடு அமையும் இடத்திற்கு அருகில் உள்ள 
சின்ன சாலை பஞ்சாயத்தை சேர்ந்தது என விஏஓ விடம் சான்று
மட்டும் வாங்கி தாருங்கள் என்றார்.

விஏஓ வா......... அய்யய்யோ..... அப்போழுது தான் 
மணியகார அம்மாவுக்கும் எனக்கும் பட்டா வாங்கரதுல
சண்டை வந்து 3000 ரூபா கேட்டு தாசில்தாரர் வரைக்கும் 
புகார் பண்ணி பைசா செலவில்லாமல் எங்கும் அலையாமல்
பட்டா வங்கியிருந்தேன் மேற்படி இடத்திற்கு.... 

என்னதான் நடக்கும் பார்க்கலாம் என மணியகாரம்மா 
செல்வி என்ற 50ஐ கடந்த காசு பைய்த்தியத்தின் 
அலுவலகத்திற்கு வந்தேன்..... 2006 உள்ளாட்சி தேர்தல் 
சமயம் அது......... உள்ளே 15க்கும் மேற்பட்டோர் பல 
காரணங்களுக்காக காத்திருந்தனர்.... 

என்னை பார்த்ததும் இருக்கையிலிருந்து எழுந்து ஓடோடி வந்து 
கடைசியாக வந்த என்னை மேலதிகாரியை போல மதிப்பு கொடுத்து 
எனக்கான சான்றை வழங்கினார்.... 

அதற்கு வேலையே இல்லாமல் போயிருச்சு...........
காரணம் எங்கள் வீட்டிற்கு அருகில் எங்கெங்கே மின்கம்பம்
போடனுமோ அங்கெல்லாம் குழி தோண்டி கொண்டிருந்தார்கள்..... 

வீடு அஸ்திவாரம் முடிந்து இப்போதுதான் சுவர் எழும்ப 
ஆரம்பித்திருந்தது.............ஒரே நாளில் கம்பம் போட்டு அடுத்த நாள்
லைன் கொடுக்க வந்தார்கள் .... நாங்கள் ஒயரிங் ஆரம்பிக்கவில்லையே.............

45 வயது மதிக்கதக்கவர் என்னை 
”அண்ணா லைன் வந்துருச்சுன்னு இந்த விண்ணப்பத்தில 
கையெழுத்து போட்டு கொடுங்க.நீங்க எப்போ எந்த நேரத்துல 
ஒயரிங் பண்ணினாலும் போன் போடுங்க. 20நிமிசத்துல வந்து 
கனெக்‌ஷன் கொடுத்திடறேன்ன்னு சொல்லி என் வேலைய காப்பாத்துங்கன்னு பரிதாபமாக கேட்டார். கையெழுத்து
போட்டுக் கொடுத்தேன்......... 20 நாள் கழிச்சு ஒயரிங் முடிச்சு
விளக்கு எரிஞ்சுது...... கட்டி முடிக்காத எங்க வீட்டில்.... 

இது தான் எங்க வீட்டுக்கு மின் இணைப்பு வந்த கதை...... 
இன்று வரை எங்க வீட்டுல கம்பத்துல பீஸ் போயிருச்சுனா 
போன் பண்ணினா போதும்.... 10ரூபா கூட வாங்க மாட்டாங்க.....

பொறுமையா படிச்சதுக்கு நன்றி....
இந்த பதிவு விழிப்புனர்வுக்காகவே பதிந்தேன்...
என் சுய தம்பட்டமாக நினைக்காதீர்......நன்றி....

நண்பர் வீட்டுக்கு மின்இணைப்பு வந்த கதை.....
இன்ப `ஷாக்`அடித்த கரண்ட்